Published : 20 Oct 2022 05:59 PM
Last Updated : 20 Oct 2022 05:59 PM
மதுரை: ‘‘ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார் என்பது மக்களுக்கு தெரியும். ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:
கேள்வி: தேவர் தங்க கவசம் குறித்து...
பதில்: தேவர் தங்கக் கவச வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்.
கேள்வி: ஆறுமுக சாமி ஆணையம் அறிக்கை குறித்து...
பதில்: அந்த ஆணையத்தின் அடிப்படையில் சிலர் நீதிமன்றம் செல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த வழக்கு முடியும் வரை அதைப்பற்றி நான் கருத்து கூற விருப்பமில்லை.
கேள்வி: திமுகவின் ‘பி’ டீம் என்று உங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து...
பதில்: யார் மீது குற்றம் என்பதை தொண்டர்களும், மக்களும் அறிவார்கள். நான் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் ஸ்டாலினை சந்தித்ததாக குற்றம் சொல்கிறார்கள். முதல்வரை நான் சந்திததாக அவர்கள் நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார். அப்படி நிரூபிக்கவிட்டால் அவர் (இபிஎஸ்) அரசியலைவிட்டு விலக தயாரா?
கேள்வி: அதிமுகவை இணைத்துக் காட்டுவோம் என்று சசிகலா கூறியுள்ளது குறித்து...
பதில்: அதிமுக தொண்டர்கள் உருவாக்கிய இயக்கம். அப்படிதான் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இயக்கத்தை உருவாக்கி வழிநடத்தி வந்தார்கள். அதிமுகவின் 50ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் யார் கட்சிக்குள் விருப்பத்தகாத பிரச்சினைகளை உருவாக்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். பாவத்தை செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையது அல்ல. ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும் மக்களுக்கும், அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும். என்னைப் பற்றி தொண்டர்களுக்கு தெரியும். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கேள்வி: தொண்டர்களை எப்போது சந்திக்க உள்ளீர்கள்?
பதில்: தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...