Published : 07 Oct 2022 07:04 AM
Last Updated : 07 Oct 2022 07:04 AM
சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இப்பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இவர்களை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பகல்12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளனர். வரும் 9-ம் தேதி தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியான துணை பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியான பெண் ஒருவரும் அன்றைய தினமே அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT