Last Updated : 17 Sep, 2022 10:45 PM

 

Published : 17 Sep 2022 10:45 PM
Last Updated : 17 Sep 2022 10:45 PM

புதுச்சேரியில் பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் - முதல்வர் ரங்கசாமி விருப்பம்

புதுச்சேரி: புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 14 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த இந்தாண்டு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது ‘‘பட்டம் வாங்குவது என்பது படித்த படிப்புக்கான பெரிய அங்கீகாரம், மரியாதை. தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து பயிற்சி பெற்று பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வது மிக முக்கியமானது. இப்போது நமக்கு நிறைய தேவை இருக்கிறது.

தொழிற்சாலைகள், நிறுவனங்களில் நன்கு படித்தவர்கள், கைவினைஞர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் பணிக்கு செல்வது என்பது மிகுந்த அவசியமான ஒன்று. வேலை கிடைக்க நிறைய தொழிற்சாலைகளை உருவாக்குவதும், புதிய தொழிற்சாலகளை கொண்டு வருவதும் அரசின் கடமை.

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றது. அதில் நீங்கள்(மாணவர்கள்) தேர்ச்சி பெற்று பல இடங்களில் பணியாற்றி உங்களுடைய திறன் மூலமாக நல்ல தரமான பொருட்களை உருவாக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்கி கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோன்று தொழிற்பயிற்சி நிலையங்களையும் மாற்ற வேண்டும் என்பது அரசின் எண்ணம். இப்போதுள்ள தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும்.
அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகின்றது. மத்திய அரசும் அதற்கான நிதியை கொடுத்துள்ளது. மாநில அரசும் நிதி ஒதுக்கியுள்ளது. ஆதலால் மாணவர்கள் திறமையை இந்த பயிற்சிகளிகள் மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் படித்த பட்டதாரிகள் நிறைய தொழில் தொடங்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயமாக அதற்கு நம்முடைய தொழில்துறை உங்களுக்கு உதவியாக இருக்கும். வங்கிகள் கடன் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். அரசு பல தொழிற்பயிற்சி நிலையங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.150 ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. அதனை ரூ.500 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதனை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது.

அட்டவணையின மாணவர்களுக்கு மாதம் ரூ.160 கொடுக்கப்படுகிறது. அதனை ரூ.1,000-ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு இருக்கிறது. தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. கைவினை பயிற்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.

இந்தியா முழுவதும் 10 லட்சம் கிளைகளுக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது என்று அறியும்போது மத்திய அரசு இதற்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்பது தான் என்னுடைய எண்ணம். ஆகவே மாணவர்கள் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’’ இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x