Last Updated : 07 Sep, 2022 06:55 AM

 

Published : 07 Sep 2022 06:55 AM
Last Updated : 07 Sep 2022 06:55 AM

நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை அரசு மின்னணு சந்தை மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு: அஞ்சல் துறை, பொது சேவை மையத்துடன் ஒப்பந்தம்

சென்னை: கிராமப் பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் தங்களின் தயாரிப்புகளை மத்திய அரசின் மின்னணு சந்தை மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பேப்பர், பென்சில், நாற்காலி முதல் ஆயுதங்கள் வரை அனைத்தையும் கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் 1922-ம் ஆண்டு தொடங்கினர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பொது பொருட்கள் வழங்கல் மற்றும் அகற்றல் இயக்குநரகம் (Directorate General of Supplies and Disposals) என்ற பெயரில் இந்நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பொருட்களை கொள்முதல் செய்வதில் நிறைய முறைகேடுகளும், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும் இருந்ததால், இந்நிறுவனம் மூடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ம்ஆண்டு ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை (GeM – Government e-Marketplace) மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான பொருட்கள் இந்த மின்னணு சந்தை மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் தங்களின் தயாரிப்புகளை ஜெம் தளத்தில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய அரசின் மின்னணு சந்தையின் தலைமை செயல் அதிகாரி பி.கே.சிங் கூறியதாவது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2016-ம் ஆண்டு அரசு மின்னணு சந்தை (ஜெம்) என்ற தேசிய பொது கொள்முதல் தளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மின்னனு சந்தை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.2.83 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்துள்ளன. அத்துடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களுக்குத் தேவையான 46.5 லட்சம் பொருட்கள் மற்றும் 250 சேவைகள் வழங்கப்படுகின்றன.

சுமார் 50 லட்சம் விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் ஜெம் இணையளத்தில் பதிவு செய்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்தப் போர்டல் மூலம் செய்யப்பட்டுள்ளன. இதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 57 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் 4.06 லட்சம் விற்பனையாளர்கள் ஜெம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம்,இத்தளத்தில் அதிகளவு பதிவுசெய்த மாநிலங்களின் பட்டியலில்மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெம் தளம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் ரூ.1,090கோடி மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளன. இதேபோல், ரூ.7,185 கோடிமதிப்பிலான ஆர்டர்களை தமிழகத்தைச் சேர்ந்த விற்பனையாளர்கள் பெற்றுள்ளனர். அண்மையில், ஜெம் தளத்தில் கூட்டுறவு அமைப்புகளும் கொள்முதல் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிறு, குறு தொழில்நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும்நெசவாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியவை தங்களது தயாரிப்புகளை ஜெம் தளம்மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இந்திய அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் ஜெம் தளத்தில் பதிவு செய்து கொண்டு தங்களது தயாரிப்புகளை எளிதில் விற்பனை செய்யலாம்.

இவ்வாறு சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x