Published : 03 Sep 2022 03:47 PM
Last Updated : 03 Sep 2022 03:47 PM

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்

சென்னை: "அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்த நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம் குறித்து அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் காவல் துறையில் ஒரு புகார் அளித்தார். ஆனால், சென்னை மாநகர காவல் துறையோ நாங்கள் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களே உதவி ஆய்வாளர் மூலம் ஒரு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தச் சம்பவத்தில் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 14 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

தமிழகத்தை ஆளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் அதிமுக அலுலலகத்தின் மீது திட்டமிட்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக அரசு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, அதிமுக அலுவலகம் முழுமையாக சேதப்பட்டிருப்பதும், அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக ராயபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்து 53 நாட்களும், நான் புகார் அளித்து 41 நாட்களும் ஆகிறது, ஆனால், அலுவலகத்தை அடித்து நொறுக்கி, சேதப்படுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவரைக்கூட காவல் துறை கைது செய்யவில்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x