Last Updated : 31 Aug, 2022 01:03 PM

 

Published : 31 Aug 2022 01:03 PM
Last Updated : 31 Aug 2022 01:03 PM

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு

மதுரை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டுகளையும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘புழுதிப்பட்டி சத்திரம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "விநாயகர் சிலை பிரதிஷ்டை, ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விநாயகர் ஊர்வலத்தின் செல்பவர்கள் யாரும் ஆபாசமாக நடனமாடவோ, பேசவோ கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி , மதம், சமூகம், சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்க க்கூடாது. எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது.

மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் ஊர்வலம் நடத்தக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் செல்பவர்கள் மதுபானம் உட்பட எந்த போதை பொருட்களையும் பயன்படுத்திருக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பாவார்கள். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊர்வலத்தை நிறுத்த காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x