Published : 03 Jun 2014 11:37 AM
Last Updated : 03 Jun 2014 11:37 AM
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மராட்டிய மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், இந்நாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டே அவர்கள் இன்று காலையில் டில்லி விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்தில் உயிர் நீத்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
தன்னுடைய கடுமையான உழைப்பாலும் அனைவரையும் வசீகரிக்கின்ற இயல்பாலும் படிப்படியாக வளர்ந்து, கோபிநாத் முண்டே மராட்டிய மாநிலத்தின் மதிக்கத்தக்க தலைவர் ஆனார்.
அவரது மைத்துனரான பிரமோத் மகாஜன் மத்திய அமைச்சராக பணியாற்றிய காலங்களில் நான் கோபிநாத் முண்டே அவர்களைச் சந்தித்து இருக்கிறேன்.
கடந்த 26 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்ற ஒரு வார காலத்திற்குள் கோபிநாத் முண்டே விபத்தில் பலியான செய்தி அவரது துணைவியாருக்கும், மூன்று புதல்வியருக்கும், குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தாங்க முடியாத பேரிடியாகிவிட்டது.
அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்
முண்டே அவர்களின் மறைவால் கண்ணீரில் துடி துடிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT