Published : 05 Jun 2014 12:00 AM
Last Updated : 05 Jun 2014 12:00 AM
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ஆட்டோக்காரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்து போலீ ஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அங்கு ‘பிரீபெய்டு ஆட்டோ சென்டர்’ என்ற கவுன்ட்டரை திறந்துள்ளனர்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பஸ்ஸில் சென்னைக்கு வருபவர்களில் பெரும்பாலோர், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் செல்வதுண்டு. மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட்டாலும், லக்கேஜ்களுடன் வரும் பயணி கள் ஆட்டோவில்தான் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல் பவர்கள், ஆட்டோக்காரர்களின் அநியாய வசூலில் சிக்கிக் கொள் கின்றனர்.
சென்னையில் ஆட்டோக்களுக் கான புதிய மீட்டர் கட்டணம் அமல் படுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. பெரும்பாலான இடங் களில் இது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் மட்டும் அரசின் மீட்டர் கட்டணம் எடுபடவில்லை. வழக்கம்போல கூடுதல் கட்ட ணத்தையே வசூலித்து வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இதற்கு முடிவு கட்ட நினைத்த போக்குவரத்து போலீஸார், ‘கோயம்பேடு பிரீபெய்டு ஆட்டோ சென்டர்' என்ற பெயரில் பஸ்கள் வெளியே செல்லும் வாசல் அருகே ஒரு கவுன்ட்டரை அமைத்துள்ளனர். இங்கு ஒரு போக்குவரத்து காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், 4 காவலர்கள் பணியில் உள்ளனர். பயணிகள் இந்த கவுன்ட்டருக்கு சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னால், அதற்கான தொகை, ஆட்டோவின் நம்பர் போன்றவற்றை ஒரு துண்டு பிரசுரத்தில் எழுதிக் கொடுக்கின்றனர். பின்னர் அந்த குறிப்பிட்ட ஆட்டோவில் பயணிகளை ஏற்றி விடுகின்றனர்.
போலீஸார் எழுதிக் கொடுத்த கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும். வழியில் ஆட்டோக் காரர்கள் கூடுதல் கட்டணம் கேட்டால், உடனே போலீஸில் புகார் கொடுக்கலாம். இதற்காக துண்டுப் பிரசுரத்திலேயே புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண்களும் (9003130103, 7418503430, 044-23452362) குறிப்பிடப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கான கட்டண விவரப் பட்டியலையும் பேனராக தயாரித்து பொதுமக்கள் பார்க்கும்படி வைத்துள்ளனர்.
அதிகாலை 5 மணியில் இருந்தே வெளியூர் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போலீஸாரும் அப்போதே கவுன்ட்டரை திறந்து பணிகளைத் தொடங்கி விடுகின் றனர்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி நடவடிக்கையால் அரண்டுபோன ஆட்டோக்காரர்கள், இப்போது கோயம்பேடு பஸ் நிலையத் தில் நிற்பதில்லை. பஸ் நிலையத் துக்கு வெளியே வரிசையாக நிறுத் தப்பட்டிருக்கும் ஆட்டோக்களை இப்போது பார்க்க முடியவில்லை.
கோயம்பேடு பஸ் நிலையத்தின் முன்பக்கம் உள்ள சாலையின் இரண்டு சிக்னல்களுக்கு இடையே ஆட்டோக்கள் சுற்றி வருகின்றன. பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வரும் பயணிகளை சாலையிலேயே மடக்கி பேரம் பேசி ஆட்டோவில் ஏற்றுகின்றனர். இதையறிந்த போலீஸார், சிக்னலில் நின்று அங்குவரும் ஆட்டோக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வைக்கின்றனர்.
பயணிகள் வரவேற்பு
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெங்களூரில் இருந்து வந்த பயணி ஜெகதீஷ் கூறுகையில், ‘‘பெங்களூரில் ஆட்டோ கட்டணம் குறைவு. ஆனால் சென்னையில் ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையை பார்த்து பலமுறை வருத்தப்பட்டிருக்கேன். இப்போது போலீஸார் எடுத்துள்ள நடவ டிக்கை பாராட்டக்கூடியது’’ என்றார்.
‘‘போலீஸாரின் இந்த நடவடிக்கை குறைந்தது ஓராண் டாவது தொடர வேண்டும். அப்போதுதான் பயணிகள் மற்றும் ஆட்டோக்காரர்கள் அரசின் கட்டணத்துக்கு பழக்கப்படுவார் கள்’’ என்றனர் சக பயணிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT