Published : 03 Aug 2022 07:18 AM
Last Updated : 03 Aug 2022 07:18 AM

கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆக.5-ல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4.07 லட்சம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 98,056 பேர்மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து கட்டணமும் செலுத்தினர்.

கலந்தாய்வுக்கு தகுதி பெற்றமாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம், அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இவற்றை சரிபார்த்து, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பாடப்பிரிவு வாரியாக இறுதிப் பட்டியலை இணையதளத்தில் கல்லூரிகள் இன்று (ஆக.3) வெளியிட உள்ளன.

இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆக. 5-ம் தேதி தொடங்குகிறது. கரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு கலந்தாய்வு நேரடி முறையில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு நாள் பற்றிய விவரங்கள், மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். அன்றைய தினத்தில் உரிய சான்றிதழ்களுடன் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் எவ்வித புகாருக்கும் இடம் தராதவாறு கலந்தாய்வை கல்லூரிகள் நடத்தி முடிக்க வேண்டும். முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்களை கணினி எழுத்தறிவு, மென்பயிற்சி, ‘நான் முதல்வன்’ ஆகிய திட்டங்களில் சேரஊக்குவிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x