Published : 03 Aug 2022 06:26 AM
Last Updated : 03 Aug 2022 06:26 AM

பதிவுத் துறையில் ரூ.2,376 கோடி; வணிக வரித் துறையில் ரூ.18,617 கோடி கடந்த ஆண்டைவிட கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை வரையிலான வருவாயைவிட இந்த ஆண்டு வணிக வரித் துறையில் ரூ.18,617 கோடியும், பதிவுத் துறையில் ரூ.2,376 கோடியும் கூடுதல் வருவாய்ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வணிக வரித் துறை கடந்த ஜூலை மாதம் ஈட்டிய வரி வருவாய் ரூ.9,557 கோடி. இது கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஜூலை மாதம்ஈட்டப்பட்ட ரூ.6,677 கோடியைவிட ரூ.2,880 கோடி அதிகம்.

நடப்பு 2022-23 நிதி ஆண்டின் ஜூலை 31-ம் தேதி வரையிலான 4 மாதங்களில் மட்டும் வணிக வரித் துறை ரூ.47,056 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2021-22 நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.28,439 கோடியைவிட இது ரூ.18,617கோடி அதிகம். இது 65.46 சதவீத வளர்ச்சியாகும்.

வரி ஏய்ப்பை தடுத்து, அரசுக்கு முறையாக வரவேண்டிய வரி வருவாயை விடுபடாமல் வசூலிக்க வேண்டும் என்று மண்டலம்தோறும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. துறைஅலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றி இந்த சாதனை வருவாயை ஈட்ட உறுதுணையாக இருந்தனர்.

இதேபோல, பதிவுத் துறையில் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1,342.01 கோடி வருவாய் வந்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1,242.22 கோடியைவிட இது ரூ.99.79 கோடி அதிகம். நடப்பு 2022-23 நிதி ஆண்டில் ஜூலை மாதம் வரை பதிவுத் துறையில் ரூ.5,718.90 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது கடந்த நிதி ஆண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.3,342.87 கோடியைவிட ரூ.2,376.03 கோடி அதிகம். இந்த வகையில் பதிவுத் துறையிலும் வளர்ச்சி விகிதம் 71.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் இந்த 2 துறைகளும் தொடர்ந்து இதேபோல செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x