Published : 02 Aug 2022 02:55 PM
Last Updated : 02 Aug 2022 02:55 PM

“செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்” - மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழகத்தில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பெண்களுக்கு பேறு காலத்திற்குப்பின் கருத்தடை வளையம் பொருத்தியத்தில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கில் சுகாதாரத் துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால், யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேர் இன்னும் போட வேண்டியது இருக்கிறது. வரும் 7ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

இதுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவுகளை வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையால்கிறார்களா என்று ஆய்வு செய்ய முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி புரிந்தால் அது வருத்தத்திற்கு உரியது. மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x