Published : 24 Jul 2022 04:17 AM
Last Updated : 24 Jul 2022 04:17 AM

குட்கா ஊழல் | விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை - சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி

சி.விஜயபாஸ்கர்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கோரவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சென்னை புறநகர் செங்குன்றத்தில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், அந்நிறுவனம் சுமார் ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியின் மூலம், குட்காவை தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, அப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், வணிக வரித் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் உதவியதும், அவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் மத்திய கலால் வரித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கொண்டுவர ரூ.55 கோடி ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘தமிழகத்தில் குட்காவை சட்டவிரோதமாக பதுக்கிவைத்து, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், செங்குன்றம் குட்கா கிடங்கில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்போதைய தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர், "சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்காவை ஒழித்தே தீர வேண்டும். இந்த வழக்கில் அமைச்சர்கள், டிஜிபி-க்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த ஊழல் வழக்கில் முதல் கட்டமாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், சுகாதாரத் துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 6 பேரையும் சிபிஐ கைது செய்து, அவர்கள் மீது 2018-ல் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தது.

மேலும், குட்கா ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்குச் சொந்தமான, ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிவைத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக, சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த முன்அனுமதி கோரிதமிழக அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு சிபிஐ கடிதம் அனுப்பி இருந்தது.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, ஓய்வுபெற்ற 2 ஐபிஎஸ் அதிகாரிகளைத் தவிர்த்து, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்பவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x