Published : 23 Jul 2022 05:36 AM
Last Updated : 23 Jul 2022 05:36 AM

இபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் - மக்களவை தலைவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஓபிஎஸ், அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

இதனிடையே பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம்அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘‘பழனிசாமி,தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.அவர் கூட்டிய சிறப்பு பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அவரது கோரிக்கையையும், கடிதத்தையும் நிராகரிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இரு கடிதங்களையும் ஓம் பிர்லா பரிசீலித்து வருவதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு தனது முடிவை அறிவிப்பார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x