Published : 20 Jul 2022 10:54 AM
Last Updated : 20 Jul 2022 10:54 AM

கள்ளக்குறிச்சி விவகாரம் | சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு விருப்பு, வெறுப்பு இல்லையென்றால், வழக்கை சிபிஐ விசாரிப்பதில் என்ன, பிரச்சினை உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என தெரியவில்லை" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 14 பேரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:" கள்ளக்குறிச்சி விசாரணை தொடர்பாக அரசு குழு, மேல் குழு அமைப்பதால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். ஒரு தாயின் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளுக்கு திமுக அரசுக்கு பதிலளிக்க வழியில்லை.இந்த வழக்கில் உண்மை நிலையை கண்டறிந்து நாட்டு மக்கள் முன் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கூறுகிறது.

ஆளுங்கட்சிக்கு இந்த விவகாரத்தில் விருப்பு, வெறுப்பு இல்லையென்றால், சிபிஐ விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சினை இருக்கு. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என தெரியவில்லை.

எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காவல்துறையை முதல்வர் ஸ்டாலினின் கையில் உள்ளது. அதிகாரிகளை மாற்றினால், முதல்வரையும் மாற்ற வேண்டும்.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு அனைத்தும் பாழாகிவிடும். அதைதான் நீதிமன்றம்,தமிழகம் அமைதிப்பூங்கா என்ற பெயரை புரட்டிப்போட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கருத்து தெரிவித்துள்ளது. இது யாருக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இதனை உள்துறையை கையில் வைத்திருக்கின்ற ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகத்தான் நாம் கருத வேண்டும். உண்மையாகவே அப்படியிருந்தால், அந்த துறையின் அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் நடந்ததுபோல் இதுவரை ஒரு கலவரம் வந்து யாருமே பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு கலவரம் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது, திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின். அவர் உள்துறையை யாருக்காவது கொடுத்தால் நன்றாக இருக்கும், அவர் கொடுக்கமாட்டார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x