Published : 14 Jul 2022 07:21 PM
Last Updated : 14 Jul 2022 07:21 PM

அதிமுக அலுவலக வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு - முத்தரப்பு வாதங்கள் என்னென்ன?

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து நாளை (ஜூலை 15) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "கட்சியின் சொத்து விவகாரம் தொடர்பாக தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகம் தற்போது அதிமுக வசம்தான் உள்ளது. கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தலைமைக் கழக செயலாளர் என்ற முறையில் அலுவலகத்திற்கு நான்தான் பொறுப்பாளர். இந்த நிலையில் கட்சியின் அலுவலகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்துள்ள நடவடிக்கை தவறானது.

அன்றைய தினம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஒரு குழுவுடன், பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி மற்றும் கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே நாங்கள் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்தோம். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் ஒரு எதிர்கட்சி அலுவலகத்திற்கு வந்து சீல் வைத்திருப்பது ஜனநாயக விரோதமான செயல். எனவே அந்த சீல் வைக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில், "கட்சி அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்று எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கட்சியில் உள்ள இருவருக்கு இடையிலான பிரச்சினையை வேறு வழிகளில்தான் தீர்க்க முடியும். இந்த விவகாரத்தில் அரசு மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில், "அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மியூசிக் அகாடமியிலிருந்து அதிமுக தலைமை அலுவலகம் வரை குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஊர்லவலமாக வந்த ஓபிஎஸ்ஸிடம் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் காவல்துறை உத்தரவை மீறி அவர் உள்ளே சென்றார். இதன்பின்னர்தான் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இது காவல்துறைக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இடையிலான மோதல் அல்ல.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல். எனவே இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் இருவரும்தான் காரணம். இதனை தடுப்பதற்குதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால்தான் இந்த மோதலில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "கடந்த ஜூலை 11-ம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து நாளை (ஜூலை 15) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x