Last Updated : 14 Jul, 2022 07:16 PM

 

Published : 14 Jul 2022 07:16 PM
Last Updated : 14 Jul 2022 07:16 PM

தமிழகத்தில் சாலை விபத்துகளில் தினசரி 41 பேர் உயிரிழக்கின்றனர்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

ராமநாதபுரம்: தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் தினசரி 41 பேர் உயிரிழக்கின்றனர் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்து பேசியது: ''தமிழகத்தில் 2 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 30 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன. மூன்று சதவீதம் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் 33 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை, காவல், சுகாதாரம், கல்வி ஆகிய 5 துறைகள் உள்ளடக்கி செயல்படுகின்றன. விபத்துகள் மூலம் தினசரி இந்தியாவில் 410 உயிரிழப்புகளும், தமிழகத்தில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

இதைக் கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், நான்கு சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன. 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் 57,713 விபத்துகள் நடந்துள்ளது.

இதில் 48,650 விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்துள்ளன, 14,912 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கைபேசி பேசிக் கொண்டும், அதிவேகத்தில் ஓட்டுபவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்.படிகட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிகம் விபத்து நடக்கும் இடங்கள் (கருப்புபுள்ளிகள்) 1337 கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் விபத்தை தடுக்க குறுகிய, நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 400 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறோம். பள்ளி வாகனங்கள், அரசு பேருந்துகளை அவ்வப்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழக அரசு ரூ. 75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ. 25 லட்சமும், 2-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ. 13 லட்சமும், 3-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை நான்கு வழிச்சாலைக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ம் கட்டமாக நாகபட்டினம் வரை, 3-ம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கார் நிறுத்தம் மற்றும் கழிப்பறை வசதிக்கு இடத்தை ஆய்வு செய்துள்ளேன். சாகர் மாலா திட்டத்தின் பாம்பன் பாலத்தின் கீழ் பாம்பன் கால்வாய் 10 மீட்டர் ஆழத்தில் தூர்வார மத்திய அரசிடம் நிதி கோரப்படும். தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன்.

இதற்காக முதல்வருடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். தமிழகத்தில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x