Published : 14 Jul 2022 10:35 AM
Last Updated : 14 Jul 2022 10:35 AM

60 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு

சென்னை: "அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இந்தியாவில் 18 -59 வயதுப் பிரிவினருக்கு ஜூலை 15-ம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர், அதாவது 72 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதது தான்.

பூஸ்டர் தவணை தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x