Published : 11 Jul 2022 08:55 AM
Last Updated : 11 Jul 2022 08:55 AM

வன்முறைக் களமான அதிமுக தலைமை அலுவலகப் பகுதி: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர மோதல் 

சென்னை: அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொள்வதால் அப்பகுதியே வன்முறைக் களம் போல் காட்சியளிக்கிறது. மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் தீர்ப்பு: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் தீர்ப்பு இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இதனிடையே, வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி வானகரம் புறப்பட்டுச் சென்றார். வானகரம் மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பிரத்யேக க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகள் உள்ளவர்கள் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியாக சோதனை செய்யப்பட்டே மண்டபத்துக்குள் அனுப்பப்படுகின்றனர்.

பூட்டை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் புறப்பட்டார் ஓபிஎஸ். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனம் முன்னேறவிடாமல் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலரும் காயமடைந்தனர். ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழக பூட்டை உடைத்து ஓபிஎஸ் உள்ளே வர வழி செய்தனர். பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய ஓபிஎஸ் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கிவிட்டு உள்ளே செல்ல அதிமுக கொடியுடன் காத்திருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தை சுற்றிவைக்கப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்தனர். தலைமைக் கழகத்தின் அனைத்து கதவுகளையும் அடித்து நொறுக்கினர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்தின் பால்கனிக்கு அவர் சென்றார். அங்கு அவர் கட்சிக் கொடியுடன் நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தார்.

இத்தனை களேபரங்களையும் கட்டுப்படுத்த தேவையான அளவு காவல்துறை அங்கு இல்லை என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.

வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் அதிமுக பொதுக் குழு கூட்டம் மற்றும் அதிமுக தலைமை அலுவலக மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x