Published : 09 Jul 2022 04:17 AM
Last Updated : 09 Jul 2022 04:17 AM

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை 11-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது

கோப்புப்படம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில், வரும் 11-ம் தேதி நடக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு தாமதமாக 2017-ம்ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர், கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், ஊதிய ஒப்பந்தம் ஏற்படவில்லை. கடைசியாக, கடந்த மே மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2019 செப்.1-ம் தேதியில் இருந்து 2 சதவீத உயர்வும், 2022 ஜன.1-ம் தேதியில் இருந்து 3 சதவீத உயர்வும் என மொத்தம் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

குரோம்பேட்டை பயிற்சி மையம்

இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை, வரும் 11-ம் தேதி காலை நடக்க உள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. துறை செயலர் கே.கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனி நபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டி உள்ளதால், ஒரு தொழிற்சங்கம் சார்பில் தலா ஒருவர் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘7-வது ஊதியக் குழு பரிந்துரையில் உள்ள ஊதிய வரன்முறையின்படி, ஊதியத்தை நிர்ணயிக்குமாறு அரசிடம் வலியுறுத்துவோம்’’ என்றனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கங்கள் முன்வைத்ததில் பெரும்பாலான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்த முறை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு அதிகம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x