Published : 07 Jun 2022 06:49 AM
Last Updated : 07 Jun 2022 06:49 AM

செல்போனுடன் இயர்போன் கட்டாயம்; பேருந்தில் தேவையற்ற இரைச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: போக்குவரத்து துறை செயலருக்கு பரிந்துரை

சென்னை: பேருந்துகளில் பயணிகளால் ஏற்படும் தேவையற்ற இரைச்சலை கட்டுப்படுத்த, அனைவரும் செல்போனுடன் இயர்போனை இணைத்து பயன்படுத்த உத்தரவிடுமாறு போக்குவரத்து துறை செயலருக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள அரசு பேருந்துகளில், பயணத்தை இனிமையாக்குவதற்காக நடத்துநர்கள் சிலர் திரையிசை பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகின்றனர். இதை ரசிப்பவர்களும் உண்டு, சிலர் எரிச்சல் அடைவதும் உண்டு.

அதேபோல, கல்லூரி மாணவர்கள் பெரும் இரைச்சலை ஏற்படுத்தியபடி தாளம் போடுவது, கானா பாடல்களை பாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமின்றி, சக பயணிகளை கண்டுகொள்ளாமல் சிலர் செல்போனில் சத்தமாக பேசுவது, செல்போனில் பாடல்களை அலறவிடுவது, வீடியோ கேம் விளையாடுவது போன்றவையும் நடக்கின்றன. வயதான பயணிகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு இதுதொந்தரவாக இருக்கிறது.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த சமூக சேவகர் கே.எல்.பொன்னுசாமி என்பவர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

‘மாநகர பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தும் வகையில் பயணிகள் பேசுவது, பாடல்கள் இசைப்பது, வீடியோ கேம் விளையாடுவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரையும் இயர்போன் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதுபோன்ற கட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதுதொடர்பான உத்தரவையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இதை பரிசீலித்த மேலாண் இயக்குநர், கர்நாடகாபோல தமிழகத்திலும் பேருந்து பயணத்தின்போது, மக்கள் செல்போனுடன் இயர்போனை இணைத்து பயன்படுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு போக்குவரத்து துறை செயலருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் இதுபோன்ற கட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுதொடர்பான உத்தரவையும் தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x