Last Updated : 05 Jun, 2022 04:00 AM

 

Published : 05 Jun 2022 04:00 AM
Last Updated : 05 Jun 2022 04:00 AM

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுமா சென்டாக் நிதி? - உள்ஒதுக்கீடும் இல்லை; 50% அரசு ஒதுக்கீடும் கிடைக்காத அவலம்

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ரூ.40 கோடி நிதி சென்டாக்குக்கு செலவிடப்பட்டும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த அளவுக்கூட பயன்படாத சூழலே உள்ளது. அதேபோல் மருத்துவத்தில் உள்ஒதுக்கீடு தருவதையும் அரசு கண்டுகொள்வதில்லை.

புதுச்சேரியில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 165 எம்பிபிஎஸ் இடங்களும், 13 தனியார் பொறி யியல் கல்லூரிகளில் 3,075 இடங்களும், 8 தனியார் நர்சிங் கல்லூரிகளில் 290 இடங்களும் பெறப்படுகின்றன.

புதுச்சேரியில் ஏழை மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிக்க வேண்டும் என்ற நோக்கில், காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தை கடந்த 2003-ல் அப்போதைய முதல்வர் ரங்கசாமி தொடங்கினார்.

இத்திட்டத்தில் சென்டாக் மூலம் தேர்வாகி அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சமும், பொறியியல் படிப்புக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கடந்த2015 முதல் பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சென் டாக் நிதி தரப்படுகிறது. இத்தொகை நடப்பாண்டில் உயர வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த நிதி உண்மையில் ஏழைகளுக்கு சென்றடைகிறதா என்றால் கேள்விக்குறிதான்.

இதில் ஆண்டுக்கு மருத்துவக் கல் விக்கு ரூ.17 கோடியும், பொறியியல், நர்சிங்படிப்புகளுக்கு ரூ.14 கோடியும் அரசு செலவிடுகிறது. செமஸ்டர் தேர்வில் தோல்வி யடைந்தால் சென்டாக் நிதி அந்தாண்டு முதல் நிறுத்தப்படுகிறது.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு

இதுதொடர்பாக அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கும் எம்பிபிஎஸ் இடம் கிடைப்ப தில்லை. நீட் பயிற்சியும் அரசு சரியாக நடத்துவதில்லை.

தமிழகத்தைப் போல்புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு மருத்துவத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர கோரிக்கை எழுப்பியும் அரசுஅதை கண்டுகொள்ளவில்லை. அரசுப்பள்ளி மாணவர்கள் தற்போது பொறியி யலை தவிர்த்து கலை, அறிவியல் படிப்பு களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். சென் டாக் நிதியுதவியில் 90 சதவீதத்துக்கு மேல்தனியார் பள்ளியில் படித்த வசதியான வர்களே பயன் பெறுகின்றனர். இதற்காக அரசு ஆண்டுதோறும் ரூ.40 கோடிக்கு மேல் செலவிடுகிறது. சென்டாக் நிதி திட்டம் யாருக்காக என்ற கேள்விதான் மனதில் எழுகிறது” என்றனர்.

தற்போது அரசு பள்ளியில் படிக்கும் இளையோர் கூறுகையில், “புதுச்சேரியில் நடப்பாண்டில் பிளஸ் 2-வில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களே இல்லை. முதலில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி அரசு வருமானஉச்ச வரம்பை நிர்ணயித்து அரசுப் பள்ளி மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவை நனவாக்க வேண்டும். அதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தர வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

அதிக கட்டணம் வசூலிப்பு

மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தலைவர் பாலா கூறுகையில், “ஏழை மாணவர்களுக்கு சென்டாக் நிதியை தர வேண்டும் என்றால்அரசு ஏற்பதில்லை. அத்துடன் கல்லூரிகளில் கட்டணக்குழு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அதை கண்காணிப்பதில்லை.

இதை கண்காணிக்க உயர்கல்வி கட்டணக்குழு கண்காணிப்பு ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அனைத்து நலத்திட்டங்களுக்கும் இருப்பது போல் வருமான உச்சவரம்பை நிர்ணயிப்பது அவசியம். தனியார் மருத்துவக் கல்லூரி களில் 50 சத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு உள்ஒதுக்கீடு இந்த கல்வியாண்டே அமல்படுத்த வேண் டும்” என்று குறிப்பிட்டார்.

யார் பயனடைகிறார்கள்?

அனைத்து சென்டாக் மாணவர் நலச்சங் கத்தலைவர் நாராயணசாமி கூறுகையில், “சென்டாக் நிதி அரசுப் பள்ளியில் படித் தோருக்கும், ஏழைகளுக்கும் கிடைப்பது அவசியம். வாக்குவங்கியை கருத்தில் கொண்டு சென்டாக் நிதியை தருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் படித்த உயர் அதிகாரிகள், வருமானவரி கட்டுவோரின் குழந்தைகள் தான் அதிகளவில் பயன் பெறுகின்றனர்.

ஏழைகளுக்கு மட்டும் தந்தால் பலரும் பயன் பெறுவார்கள். அத்துடன் பலகோடி மிச்சமாகும். அந்த நிதியில் அரசுப் பள்ளி களின் தரத்தை உயர்த்தலாம். நீட் பயிற்சி தரலாம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி புதுச்சேரியில் இயங்கும் தனியார், நிகர் நிலை மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தில் புதுச்சேரி மாணவர்கள் படிக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x