Published : 31 May 2022 05:13 AM
Last Updated : 31 May 2022 05:13 AM

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் - அதிகாரிகள் தகவல்

சென்னை: பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.

மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ், அனைத்து வாடிக்கையாளர்களும் சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கிடையில், ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதனால், சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து தற்போது ரூ.1,018.50 ஆக உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டப் பயனாளிகள் 9.17 கோடி பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 35 லட்சம் உஜ்வாலாதிட்டப் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x