Published : 30 May 2022 01:01 PM
Last Updated : 30 May 2022 01:01 PM

மாநிலங்களவைத் தேர்தல்: ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று (மே 30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த முறை அவர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்,பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்.பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம், ப.சிதம்பரம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கலின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.

ஒவ்வொரு மாநிலங்களவை எம்,பி தேர்வாவதற்கும் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடலாம். இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸூக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x