Published : 28 May 2022 04:50 AM
Last Updated : 28 May 2022 04:50 AM

கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கனமழை - 500 ஏக்கரில் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதம்

கடலூர் அடுத்த வெள்ளகரை பகுதியில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைகள்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 26-ம் தேதி இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் சூறைக் காற்றும் வீசியது. இதில், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வி.காட்டுப்பாளையம், எம்.புதூர், வெள்ளக்கரை, பத்திரக்கோட்டை, சாத்தங்குப்பம், ஓதியடிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து வி.காட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி மா.சிற்றரசன் கூறும்போது, ‘‘ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஓரிரு மாதத்துக்குள் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதிலிருந்து விவசாயிகள் மீண்டுவந்து, மீண்டும் சாகுபடி செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில பொதுச் செயலாளர் பெ.ரவீந்திரன் கூறும்போது, “வாழையை காப்பீடு செய்வதில் விவசாயிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வாழை மரங்களை கழியால் கட்டியிருந்து, அதன் பின்னர் பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பு ஏற்பட்டால் முழு சாகுபடி செலவையும் திரும்ப வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x