

சென்னை: தமிழகத்தில்தான் கடந்த ஏப்ரல் மாதம் மிகக் குறைவான பணவீக்க சராசரி உள்ளதாகவும், இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை எனவும் முதல்வர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்க சராசரி 7.79% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இது 5.37% ஆக மட்டுமே உள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இந்த சாதனை தொடரும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய #DravidianModel நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இச்சாதனை தொடரும்!” என்று தெரிவித்துள்ளார்