Published : 10 Jun 2014 09:00 AM
Last Updated : 10 Jun 2014 09:00 AM

சென்னை, புறநகரில் சூறைகாற்றுடன் கனமழை- தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை பகல் வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் நீர் தேங்கியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. போக்குவரத்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கத்தரி வெயில் முடிந்த பின்பும் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் 107 டிகிரியை எட்டியது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுவந்தனர்.

இடி, மின்னலுடன்..

இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இந்த மழை விட்டு விட்டு திங்கள்கிழமை மதியம் வரை பெய்தது. தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பெரும்புதூர் உள்பட புறநகர் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. வெயிலால் வாடியிருந்த சென்னை நகரை ஞாயிறு பெய்த பெருமழை குளிர்ச்சியாக்கியது.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பெசன்ட் நகரில் உள்ள கம்பர் தெரு, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தோட்டசாலை, அண்ணா சாலை, கே.கே. நகர், பூந்தமல்லி, வடபழனி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை அருகே என பல்வேறு இடங்களில் விழுந்து கிடந்த மரங்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

தேங்கிய மழைநீர்

தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக தி.நகர், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் பாலம், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கோயம் பேடு, புளியந்தோப்பு, வியாசர்பாடி போன்ற இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் வாகன ஒட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். பல இடங்களில் மழை நீர் வடிகால் முறையாகப் பாரமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் செல்ல முடியாமல் மழைநீர் சாலையிலேயே தேங்கி இருந்தது.

மழைநீர் கால்வாய்களை தூர் வாரும் பணியை மாநகராட்சி தொடங்கிவிட்டது. வரும் ஜூலை மாதத்துக்குள் அனைத்து கால்வாய்களையும் தூர் வாரத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் மழை பெய்ததால் பல இடங்களில் நீர் வடிய வழியின்றி, சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது. இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பள்ளி மாண வர்கள், அலுவலகம் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். பருவ மழை தீவிரமடைவதற்குள் அனைத்து இடங்களிலும் மழைநீர் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று பாதிக் கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கிய தால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.மழை விடாமல் பெய்ததால் மின்வாரியத் தினரால் உடனடியாக கோளாறை சரிசெய்ய முடிய வில்லை. சாலிகிராமம், பெரம்பூர், வில்லி வாக்கம், பொத்தேரி உள்ளிட்ட பல இடங்களில் காலை வரை மின்விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x