Published : 03 May 2022 07:08 AM
Last Updated : 03 May 2022 07:08 AM

தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை

அதில், இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கி செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x