Published : 02 May 2022 04:45 AM
Last Updated : 02 May 2022 04:45 AM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரவாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரிஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

மிதமான மழை பெய்யும்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மே 2-ம் தேதி (இன்று) தமிழகத்தின் தென் கடலோரமாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3, 4, 5-ம் தேதிகளில் தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 2 செ.மீ., தேவாலா, கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x