Published : 25 Apr 2022 03:18 AM
Last Updated : 25 Apr 2022 03:18 AM

"சாதி மதத்தால் தமிழினத்தை பிளவுபடுத்தி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்...நாம் பலியாகிவிடக் கூடாது" -  முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழினம் அதற்குத் பலியாகிவிடக் கூடாது, அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: "அஸ்ஸலாமு அலைக்கும். இப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெருமக்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள். சிறுபான்மை இயக்கத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, தொடரத் தான் போகிறது. அதில் யாரும் களங்கத்தையோ பிரிவையோ ஏற்படுத்த முடியாது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றம் 1967-ம் ஆண்டு ஏற்பட்டது. ஒரு பெரிய கூட்டணி அமைந்தது. ஆட்சிக்கு வந்தோம். அந்தக் கூட்டணியில் மிகமிக முக்கியப் பங்களித்து தோள் கொடுத்து நின்றவர் “காயிதே மில்லத்”தான். 1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இஸ்லாமிய அமைச்சர் யாரும் இல்லை. அண்ணா தான், இஸ்லாமிய சமூகத்திற்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அது காங்கிரஸ் ஆட்சிக்காலம். கடையநல்லூர் அப்துல் மஜீத் அதன்பிறகு தான் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த திமுக, ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது. இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை நான் தான், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” கொண்டு வந்து நிறைவேற்றினேன். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மாநிலங்களவையில் CAA-விற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் அதிமுக உறுப்பினர்கள். இந்தப் பத்துப் பேரும் ஆதரித்ததால்தான் அந்தச் சட்டமே நிறைவேறியது. நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் மக்களவையிலும் இதனை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய கட்சி திமுக.

மதம் என்பதும், சமய நம்பிக்கைகள் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மையும் அதிகம், பலமும் அதிகம். தமிழினத்தை சாதியால், மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையை கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது. அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x