Published : 15 Apr 2022 07:03 PM
Last Updated : 15 Apr 2022 07:03 PM

இலங்கை நெருக்கடி | மண்டபம் முகாமில் தங்கியுள்ள தமிழர்களுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால் தமிழகம் வந்து, மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடந்த மார்ச் 22-ம் தேதியன்று 16 நபர்கள் (கைக்குழந்தை உட்பட) கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு வரும் இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த நாட்டில் வாழ முடியாமல் தங்களுடைய வாழ்வை இழந்து, இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை சக மனிதர்களாகக் கருதி, அவர்களை அரவணைக்க வேண்டியது நம்முடைய கடமை என்றும், தற்போது இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையில், இந்தியாவிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, தற்காலிகப் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை (Special Provisions to give temporary asylum) வழங்கிட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ம் தேதியன்று தமிழக முதல்வர், பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று பிரதமரை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடந்த 7-4-2022 அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்தபோது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு உறுதியோடு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை உடனடியாக செய்து தருமாறும் தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனர், இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, 19,223 இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த 58,547 நபர்கள் ராமநாதபுரம் மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தங்குமிடம், குடிநீர் வசதி, மின்சார வசதி, ஒவ்வொரு மாதமும் கருணைத் தொகை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை, அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குதல், மானிய விலையில் ஓராண்டுக்கு ஐந்து எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்கள்.

இந்நிகழ்வில். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், செஞ்சி. கே. எஸ். மஸ்தான் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி. ஐகந்தாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x