Published : 28 Mar 2022 07:21 AM
Last Updated : 28 Mar 2022 07:21 AM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது: உள் தமிழகப் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 28-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 29-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 30, 31-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மார்ச் 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி தேனி மாவட்டம் தேக்கடி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, நீலகிரி மாவட்டம் சாந்தி விஜயா பள்ளி, சேலம் மாவட்டம் சந்தியூர் கேவிகே ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x