Published : 15 Mar 2022 09:39 AM
Last Updated : 15 Mar 2022 09:39 AM

உதகையில் சுற்றுலா பயணிகளை கவர ரூ.50 கோடியில் 3 புதிய திட்டங்கள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், உதகையில் ரூ.50 கோடியில் கோரிசோலை அணை பூங்கா, பட்பயரில் இசை நீரூற்று, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய 3 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் காந்திராஜ் தெரிவித்தார்.

முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரவும், புதிய சுற்றுலா தலங்களை ஏற்படுத்தி, அவர்களது வருகையை அதிகரிக்கவும் மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி உதகையில் 3 புதிய சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.

உதகை நகராட்சிக்கு உட்பட்ட கோரிசோலை அணை பகுதியை பூங்காவாக மாற்றி, நீர் கட்டமைப்புகள் மேம்படுத்தி, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு படகுகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, ரூ.15 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு சூழ்ந்து காணப்படும் புதர்களை அகற்றி பசுமையான பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உதகை நகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறும்போது, "உதகை பட்பயர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ரூ.32 கோடி மதிப்பில் இசை நீரூற்று அமைக்க, அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, வண்ண விளக்குகளுடன் இசை நீருற்று அமைக்கப்பட இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. முக்கிய பகுதி என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. அதேபோல, உதகையில் பிரம்மாண்ட வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் நடுவே நடந்து சென்று மீன்களை கண்டு ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கோரிசோலை அணையில் ரூ.15 கோடியில் புதிய சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்காக கோடப்பமந்து, தலையாட்டுமந்து பகுதிகளில் இருந்து அணைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலமாக தொட்டபெட்டா சிகரத்தை பார்த்த பின்னர், புதிய சுற்றுலா தலத்தையும் கண்டு ரசிக்கலாம்.

மேலும், உதகை ஏடிசி பகுதியில் ரூ.1.5 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவம் கிடைப்பதோடு, வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x