Published : 11 Mar 2022 02:05 PM
Last Updated : 11 Mar 2022 02:05 PM

’மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை’ - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்த பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களை கைது செய்வதாக குறிப்பிட்டார்.

பின்னர், இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x