Published : 03 Mar 2022 08:50 AM
Last Updated : 03 Mar 2022 08:50 AM

ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

சென்னை: தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட அரசாணை: சென்னையில் மழை வெள்ளம் தேங்கியது குறித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த ஜன. 6-ம் தேதி பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க,ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பெரும்பான்மை மக்களின்விருப்பத்தின் படியானதா? திட்டத்துக்கு மத்திய, மாநிலஅரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய விதிப்படி வழங்கப்பட்டதா? பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பனவற்றை விசாரணைக் குழு ஆய்வு செய்யும்.

மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளைகுழு அளிக்கும். பதவியேற்ற 3 மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விசாரணைக் குழு அலுவலகம், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் செயல்படும். நகராட்சி நிர்வாக இயக்குநர், விசாரணைக் குழுவுக்கான அலுவலகம், உரிய தகுதியான அலுவலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x