Published : 03 Mar 2022 05:00 AM
Last Updated : 03 Mar 2022 05:00 AM

தி.மலை மாவட்டத்தில் 4 நகராட்சி, 10 பேரூராட்சிகளில் 273 கவுன்சிலர்கள் பதவியேற்பு

தி.மலை மாவட்டத்தில் தி.மலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிகள் மற்றும் செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம் பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் என 10 பேரூராட்சிகளுக்கான தேர்தல் முடிவு கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்களின் உறவினர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும் வெளியே சென்ற கவுன்சிலர்களுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற 39 கவுன்சிலர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வந்தவாசி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு நகராட்சி ஆணையாளர் முஸ்தபா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ரகுராம், ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 123 வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

செய்யாறில் வாக்குவாதம்

செய்யாறு நகராட்சி அலுவலகத் தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக கவுன்சிலர்களை பதவியேற்க அழைத்தபோது கட்சியின் பெயரைக்கூறியும் மற்ற கட்சியின் கவுன்சிலர்களை அழைக்கும் போது கட்சியின் பெயரை கூறாமல் அழைத்துள்ளனர். இதற்கு, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் மற்றும் காவலர்கள் அவர்களை சமாதானம் செய்து பிரச் சினையை தீர்த்து வைத்தனர்.

பேரூராட்சிகள்

செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற 150 கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பேரூராட்சிகளில் பதவியேற்பு விழாக்கள் எளிமையான முறையில் நடைபெற்றன.

மறைமுக தேர்தல்

நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற நிலையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக் கான தேர்தல் நாளை (4-ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக கவுன்சிலர்களுக்கான சிறப்பு கூட்டத்தில் காலையில் தலைவர் பதவிக்கான தேர்தலும், தொடர்ந்து பிற்பகலில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால் தேர்தலை நடத்துவதற்காக வாக்குப் பெட்டியை தயாராகவும் வைத்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x