Published : 02 Mar 2022 06:30 AM
Last Updated : 02 Mar 2022 06:30 AM

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா: நள்ளிரவில் லிங்கோத்பவ மூர்த்திக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடை பெற்றது.

விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே ‘யார் பெரியவர்’ என கடும் போட்டி நிலவியது. அப்போது, ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சிக் கொடுத்தார். அதன் மூலம் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரது அகந்தை அழிந்தது. அந்த நாள், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி என்றும், திருவண்ணாமலை திருத்தலத்தில் நிகழ்ந்தது என்றும், இதுவே சிவராத்திரி என புராணங்கள் கூறுகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுமார் 6 மணி நேரம் லட்சார்ச்சனை நடை பெற்றது. இதையடுத்து நேற்று இரவு 7.30 மணி, நள்ளிரவு 11.30 மணி, மறுநாள் (இன்று) அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணியளவில் என மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதற்கிடையில், மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந் துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரா தனை நடைபெற்றது. இதை யொட்டி கோயில் கலையரங்கில் இசை நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றன. தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தன. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலையில் இருந்து கிரிவலம் சென்றனர். வெளி மாவட் டம் மற்றும் வெளி மாநில பக்தர் கள், சிவனடியார்கள், சாதுக்கள் மற்றும் வட மாநில அகோரிகள் உள்ளிட்டோர் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

இதேபோல், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x