Published : 01 Mar 2022 04:35 PM
Last Updated : 01 Mar 2022 04:35 PM

கோயில் குளத்தில் புதைக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை: காவல்துறை விசாரணையில் தகவல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோயில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் , புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புன்னைவனநாதர் சன்னதியில், அலகில் மலருடன்தான் மயில் சிலை இருந்தது என்பதற்கு எந்தப் புகைப்பட ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அலகில் பூவுடன் இருந்த மயில் சிலையே இலச்சினையாக இருந்ததாக நிபுணர்களும், அர்ச்சகர்களும் தெரிவித்துள்ளனர். அதனால் அலகில் பாம்புடன் உள்ள மயில் சிலையை மாற்றி விட்டு, அலகின் பூவுடன் இருந்த மயில் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது. இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. அந்த சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

முன்னதாக சமீபத்தில் கோயிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x