Published : 27 Feb 2022 08:19 AM
Last Updated : 27 Feb 2022 08:19 AM

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்; இன்று மாலை 5 மணி வரை வழங்கல்

சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

முன்னதாக, இன்றைய முகாமில் பொதுமக்கள் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 27-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடைபெறுகிறது.

பொதுமக்கள் கட்டாயம் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். யாரும் கவனக்குறைவாக இருக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாநில எல்லைகளிலும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, அடுத்த 3 நாட்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதர உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் - முக்கிய அம்சங்கள்:

> சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

> 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

> போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

> சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயமாகும்.

> தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது /Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

> பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்/இருமல் அல்லது மற்ற தொற்று கரோனா தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

> மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

> தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

> அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

> விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

> முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

> புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

> போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

> போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் (Transit Booths) கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

> நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

> போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

> போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x