Published : 24 Feb 2022 07:35 AM
Last Updated : 24 Feb 2022 07:35 AM

போர் பதற்றம் நிலவும் உக்ரைனில் இருந்து 240 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: ரஷ்யா தனது மேற்கு அண்டை நாடான உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. இதனால் போர் பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து, உக்ரைனில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேறும்படி அங்குள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து உக்ரைனில் இருந்து பிப்ரவரி 22, 24 மற்றும் 26-ல்3 விமானங்களை இயக்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் முதல் விமானம் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டது. இந்தவிமானம் சுமார் 240 மாணவர்களுடன் நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது.

இதுகுறித்து சிவம் சவுத்ரி என்ற மாணவர் கூறும்போது, “அங்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அமைதியாகத்தான் தெரிகிறது. என்றாலும் அங்குள்ள சூழலின் முன்னேற்றம் மற்றும் தலைவர்கள் கூறுவதை பார்க்கும்போது, வரும் நாட்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை” என்றார்.

மற்றொரு மாணவர் கூறும்போது, “நான் இந்தியா திரும்பியதால் எனது பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். நானும் பாகாப்பாக உணர்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x