Published : 24 Feb 2022 08:56 AM
Last Updated : 24 Feb 2022 08:56 AM

ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கான பந்தயத்தில் முந்தப்போவது யார்?

அமைச்சரின் கண் அசைவு யாருக்கோ அவருக்கே ஆவடி மாநகராட்சி மேயர் பதவி கிடைக்கும். இந்த பந்தயத்தில் முந்தப்போவது யார்? என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

நகராட்சியாக இருந்த ஆவடி 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக ஆன பிறகு முதல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 48 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதில் திமுக 35 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 3, மதிமுக 3, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுக 4, சுயேச்சை ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆவடி மேயர் பதவி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவில் வெற்றி பெற்றவர்களில் 10 பேர் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படவாய்ப்புள்ளது. இதில் 6 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மாநகராட்சியின் முதல் மேயர் ஆகும் ஆசையில் அனைத்துஉறுப்பினர்களும் விறுவிறுப்பாகக் களம் இறங்கியுள்ளனர்.

இதனிடையே தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவடியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இதனால், ஆதிதிராவிடர் ஆண்களில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளது.

இதில் 37-வது வார்டு வெற்றிபெற்ற வழக்கறிஞர் ரமேஷ், 21-வது வார்டு வீரபாண்டியன், 24-வது பெருமாள், 9-வது வார்டு உதயகுமார் ஆகிய 4 பேரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. பால்வளத் துறை அமைச்சர் நாசர் கண் அசைவின்படி நடப்பவருக்கே மேயர் பதவி கிடைக்கும்.

இதேபோல் 4-வது வார்டில் வெற்றிபெற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசர் மகன் சா.நா.ஆசிம்ராஜா துணை மேயராக வாய்ப்பு உள்ளது. இதேபோல் 42-வது வார்டில் வெற்றிபெற்ற ராஜேந்திரனுக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே மதிமுக,காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளதால் துணை மேயர் பதவியைக் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சியினர் சிலர் கூறும்போது, “அமைச்சர் நாசரின் கண் அசைவின்படி செயல்படும் ஒருவருக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும். நாசரின் மகனைத் துணை மேயராக்கி அனைத்தையும் மகனின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமைச்சர் திட்டமிட்டுள்ளார். அப்படிப் பார்க்கும்போது மேயர் பதவி ‘டம்மி’ ஆகவே இருக்கும். துணைமேயர்தான் அதிகாரம் மிக்கவராக இருப்பார்” என திமுகவினர் வேதனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x