Published : 23 Feb 2022 06:22 AM
Last Updated : 23 Feb 2022 06:22 AM

36 வருடங்களுக்கு பிறகு மண்டபம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

ராமேசுவரம்

36 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் கோட்டையான மண்டபம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தங்க மரைக்காயர் (எ) ஷேக் அப்துல் காதர் 1986, 1996, 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக 5 முறை மண்டபம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். 2019-ம் ஆண்டு தங்க மரைக்காயர் தனது 83-வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு பின்னர் தற்போது நடைபெற்ற பேரூராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மோதினர்.

திமுக சார்பில் தலைவர் பதவிக்கு மண்டபம் நகரச் செயலாளர் ராஜா 18-வது வார்டில் போட்டியிட்டார். ராஜாவின் மனைவி ஜெயந்தியின் சகோதரர் இளையராஜா, அதிமுக சார்பில் தலைவராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளரான இளையராஜா 17-வது வார்டில் போட்டியிட்டார். இதுதவிர திமுக சார்பில் ஜெயந்தி 3-வது வார்டிலும், அவரது மற்றொரு சகோதரர் சம்பத் ராஜா 2-வது வார்டிலும் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் ஜெயந்தியின் சகோதரி சைலஜா 12-வது வார்டிலும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 12 வார்டுகளிலும், அதிமுக 1 வார்டிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் ராஜா 504 வாக்குகளும், ஜெயந்தி 203 வாக்குகளும், சம்பத் ராஜா 236 வாக்குகளும், அதிமுக சார்பில் சைலஜா 270 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

17-வது வார்டில் போட்டியிட்ட இளையராஜா திமுக வேட்பாளர் நம்புராஜனிடம் தோல்வியை தழு வினார்.

அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த மண்டபம் பேரூராட்சியை 36 வருடங்கள் கழித்து திமுக கைப்பற்றி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x