

சென்னை: "தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை முழுமையாக ஏற்று பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மூலை முடுக்கெல்லாம் தாமரையை மலரச் செய்கிறோம். இந்த வெற்றியானது பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக மக்கள் பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நினைத்த வெற்றியை அடைந்து விட்டோம். இனி பாஜகவுக்கு ஏறுமுகம்தான். வருகின்ற காலம் நிச்சயமாக பாஜகவின் காலம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
எங்களின் வலிமையை உணர்த்துவதற்காகவே, இந்தத் தேர்தலில் தனித்து களம் கண்டோம். கடின உழைப்பால் இப்போது 3-வது இடத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்கள் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த தலைவர்களுக்கு நன்றி. பல இடங்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மக்கள் நலன் சார்ந்த அரசு திட்டங்களை பாஜக உறுதுணையாக இருந்து ஆதரிக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் சோர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து பயணிப்போம்" என்று கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவின் வலிமையை உணர்த்தவே தனித்துப் போட்டியிட்டோம். அதேநேரம் அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். பாஜக வலிமை பெற்றுவருகிறது. ஒரு தேர்தலில் பின் தங்கிவிட்டது என்பதற்காக அதிமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது" என்று கூறியுள்ளார்.