Last Updated : 15 Feb, 2022 05:59 PM

 

Published : 15 Feb 2022 05:59 PM
Last Updated : 15 Feb 2022 05:59 PM

அரசு போக்குவரத்து கழக சட்டப்பிரிவில்  சட்டம் படிக்காதவர்களுக்கு பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் சட்டம் படிக்காதவர்களுக்கு சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கியதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 1980-ல் எழுத்தராக பணியில் சேர்ந்தவர் தங்கவேலு. இவர் அரசு போக்குவரத்து கழக சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் 24.5.2012-ல் உத்தரவிட்டது. இந்நிலையில், சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதியான முதுநிலை கண்காணிப்பாளராக பணிபுரியதாதால் பதவி உயர்வு வழங்க முடியாது என 29.5.2012-ல் உத்தரவிடப்பட்டது. 31.5.2012-ல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தனக்கு சட்டப்பிரிவு உதவி மேலாளர் பதவி உயர்வு வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி தங்கவேலு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்பப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, நிர்வாகப் பிரிவு என 3 பிரிவுகள் உள்ளன. தொழில்நுட்பப் பிரிவில் தொழில்நுட்பம் பயிலாதவர்களை நியமிக்க முடியாது. அதே நேரத்தில் சட்டம் படிக்காதவர்களுக்கு சட்டப்பிரிவில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சட்டப்பிரிவு உதவியாளராக பணிபுரியும்போதே போக்குவரத்து கழக வழக்குகளை கவனித்துள்ளார். இதனால் அவருக்கு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெறுவதற்கு போதுமான தகுதியுள்ளது. இருப்பினும் சட்டம் படிக்காதவர்கள் சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பொது பணி விதிகள் பின்பற்றப்படவில்லை. பதவி உயர்வு பெற்ற பலர் வேறு கழகங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, மனுதாரர் 1995 முதல் சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற தகுதியானவர். எனவே, அவருக்கு 1995 முதல் கண்காணிப்பாளர் (சட்டம்) பதவி உயர்வு வழங்கி, பணப்பலன்களை வழங்க வேண்டும். அடுத்த நிலையிலான பதவி உயர்வும், பணப்பலன்களையும் அவருக்கு வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை 6 வாரத்தில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x