Last Updated : 15 Feb, 2022 05:40 PM

 

Published : 15 Feb 2022 05:40 PM
Last Updated : 15 Feb 2022 05:40 PM

சென்னையில் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லம் முன்பு நேற்று (பிப்.14) அறப்போராட்டம் நடத்தினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. அமைதியான வழியில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x