Published : 13 Feb 2022 11:45 AM
Last Updated : 13 Feb 2022 11:45 AM

திருப்பத்தூர் அருகே கற்கால கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்துார் அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, ஆசிரியர் அருணாசலம் அடங்கிய ஆய்வுக்குழவினர் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் குறித்தகள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழங்கற்கால கருவிகள், கற்கோடாரிகள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளை ஆய்வுக்குழுவினர் கண்டறிந் துள்ளனர்.

இது குறித்து மோகன்காந்தி கூறியதாவது, ‘‘திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதுார் நாடு ஊராட்சியில் வழுதலம்பட்டு என்ற சிற்றுார் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேப்பமரத்தடியில் கருநிறத்தில் வழவழப்பான 10-க்கும் மேற்பட்ட பழங்கால கற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தோம்.

அதில், 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய ஆதி மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய கற்காலக் கருவிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஜவ்வாது மலையில் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே மனித குடியேற்றம் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்த கற்கோடாரிகளை இப்பகுதியைச் சேர்ந் மலைவாழ் மக்கள் ‘பிள்ளையாரப்பன்’ என்ற பெயரை சூட்டி அதை தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த பிள்ளையாரப் பனுக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதாக இங்கு வசிக்கும் மழைவாழ் மக்கள் நம்புகின்றனர்.

தங்களின் காட்டு வழிப்பயணத் தின் போது இங்குள்ள பிள்ளை யாரப்பன் வழித்துணையாக இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இது தவிர விவசாய நிலங்களில் ஏரோட்டும் போதும், நீர் நிலைகளுக்கு அருகாமையிலும் கிடைக்கும் கற்கோடாரிகளை கொண்டு வந்து ஓரிடத்தில் குவித்து வைக்கின்றனர்.

இந்த கற்கோடாரிகள் இரும்பால் செய்யப்படுகின்ற கோடாரியை போல அடிப்பகுதி அகன்றும், கூர்மையாகவும் காணப்படுகிறது. இதன் நுனிப்பகுதி கைப்பிடி போலக் காட்சி தரும். எனவே இதற்கு கற்கோடாரி என அக்காலங்களில் பெயரிடப்பட்டன. வழுதலம்பட்டு ஊர் நடுவில் சாலையோரத்தில் உள்ள 10-க்கும்மேற்பட்ட கற்கோடாரிகள் வழிபாட்டில் உள்ளன. இவை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளாக இருக்கக்கூடும்.

வழுதலம்பட்டை அடுத்துள்ள சாமி பாறையின் உச்சியில் மூன்று கற்கோடாரிகள் உள்ளன. இதே பகுதியில் பெருமாள் பாதம் என்ற இடத்தின் அருகாமையிலும் 3 கற்கோடாரிகள் உள்ளன. இவை அனைத்தும் ஜவ்வாதுமலையின் தொன்மையை பறைசாற்றும் ஆவணங்களாக இருப்பதால் இந்த கற்கால கருவிகளை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x