Published : 11 Jun 2014 06:21 PM
Last Updated : 11 Jun 2014 06:21 PM

40 ஆண்டுகளுக்கு பிறகு மீனவ கிராமத்துக்கு மின்வசதி- அப்துல்கலாம் அறக்கட்டளையால் விளைந்தது

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் முந்தல்முனை மீனவக் கிராமத்துக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு மின் வசதி கிடைத்துள்ளது.

பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட முந்தல்முனை மீனவக் கிராமத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 100-க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதால் பட்டா, ஊராட்சி மன்ற ரசீது கிடைக்கவில்லை. மக்கள் வலியுறுத்தியும் கோயில் இடத்தை தானமாகக் கொடுக்கவோ, விற்கவோ சட்டப்படி முடியாது என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துவிட்டது. இதனால், மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கிராமம் இருளில் மூழ்கிக் கிடந்தது. பள்ளிக் குழந்தைகள் தெருவிளக்குகளின் உதவியுடன் படித்து வந்தனர்.

இதையறிந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ‘மிஷன் ஆஃப் கேலரி’ அறக்கட்டளையினர், ‘வீ சர்வ்’ அறக்கட்டளையுடன் இணைந்து முந்தல்முனை மீனவக் கிராமத்துக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்தனர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் கட்டமாக அந்தக் கிராமத்தில் உள்ள 35 குடும்பங்களுக்கு சோலார் மின் சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அப்துல் கலாமின் பேரனும், ‘மிஷன் ஆஃப் கேலரி’யின் நிர்வாகியுமான சலிம் மின் சாதனங்களை வழங்கினார்.

இதுகுறித்து முந்தல்முனை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பொன்னுச்சாமி கூறியது:

கடந்த 40 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், அகதிகளைப்போல வாழ்ந்து வந்தோம். எங்கள் குழந்தைகள் தெரு விளக்குகள் உதவியுடன் படிப்பதை அறிந்த அப்துல் கலாம் அறக்கட்டளையினர், இருளில் மூழ்கிக் கிடந்த எங்கள் கிராமத்துக்கு ஒளி ஏற்றியுள்ளனர். நாங்கள் பல ஆண்டுகளாக வசிக்கும் இந்த இடத்தை ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கு இந்து அறநிலையத் துறை வழங்கவும், மின் இணைப்பு கிடைக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x