Published : 05 Feb 2022 11:39 AM
Last Updated : 05 Feb 2022 11:39 AM

மதுரை மாநகராட்சி தேர்தலில் 80 வார்டுகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்: அதிக வார்டுகளை கைப்பற்ற மாநகர் மாவட்ட செயலாளர்கள் வியூகம்

மதுரை

மதுரை மாநகராட்சியின் 80 வார்டுகளில் திமுக-அதிமுக நேரடியாக மோதுவதால் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கருதப் படுகிறது. இதில் அதிக வார்டுகளைக் கைப் பற்ற இரு கட்சிகளையும் சேர்ந்த மாவட்டச் செயலர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

சென்னைக்கு அடுத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. இந்த மாநகராட்சியின் மேயர் பதவியைப் பிடிக்க எம்ஜிஆர்-கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக, அதிமுக இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சி 1971-ம் ஆண்டு உதயமான பின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த முத்து இருந்தார். அதற்குப் பின் அவர் 1978-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்தவுடனே அதே ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி வழங்கினார். இந்தத் தேர்தலில் ஐந்து ஆண்டுகளாக இருந்த மேயர் பதவியை ஆறு ஆண்டுகளாக மாற்றி அந்த ஆறு ஆண்டுகளில் (1978-1984) தலா 2 ஆண்டுகள் என்ற அடிப்படையில் மூன்று மேயரைத் தேர்வு செய்தார். அந்த வரிசையில் அதிமுகவைச் சேர்ந்த முத்து முதல் இரண்டு ஆண்டு கள் மேயராக இருந்தார். அடுத்தடுத்த 2 ஆண்டுகள் அதே கட்சியைச் சேர்ந்த எஸ்.கே.பாலகிருஷ்ணன், எஸ்.பட்டுராஜன் ஆகியோர் மேயராகினர். அதன்பிறகு நடந்த மாநகராட்சி தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த பி.குழந்தைவேலு (1996), செ. ராமச்சந்திரன் (2001), கோ.தேன்மொழி (2006) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடைசியாக 2011-ல் அதிமுக வெற்றிபெற்று ராஜன் செல்லப்பா மேய ரானார். இவர் தனது பதவி காலம் முடி வதற்குள் கடைசி ஓராண்டுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன்பின் மாநகராட்சி தேர்தல் நடக்கவில்லை.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவை பொருத் தவரை மாநகரிலுள்ள இரு மாவட்டச் செயலர்களில் யார், அதிகமான வார்டுகளை வெற்றிபெற வைக்கிறார்களோ அவர்களுக்கு மேயர் வேட்பாளரை பரிந்துரை செய்யும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்க உள்ள தாக கூறப்படுகிறது.

அதனால், திமுக தரப்பினர் தற்போதைக்கு மேயர், துணை மேயர் பதவிகளில் கவனம் செலுத்தாமல் கவுன் சிலர் தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்ற வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

அதிமுக தரப்பில் மேயர் வேட்பாளர் இவர்தான் என்று அடையாளப்படுத்த முடியாத அளவுக்கு வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, முன்னாள் மேயர் விவி.ராஜன்செல்லப்பா குடும்பங்களில் இருந்து யாரும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைக்கு அக் கட்சி யாரையும் மேயர் வேட்பாளராக அடை யாளப்படுத்தவில்லை.

திமுக கூட்டணியில் திமுக 80, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் 8, மதிமுக 3 என மொத்தமுள்ள 100 வார்டுகளில் போட்டியிடுகின்றன. அதிமுக 100 வார்டுகளில் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜக 100 வார்டுகளில் போட்டியிடுகிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில், திமுக, அதிமுக 80 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. இதனால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x