Published : 03 Feb 2022 09:59 PM
Last Updated : 03 Feb 2022 09:59 PM

முதல்வர் அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி கூட்டம் - பாஜக புறக்கணிப்பதாக அறிவிப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட வரும் 5-ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை காலை, தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டு, பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x