Published : 09 Jun 2014 10:18 AM
Last Updated : 09 Jun 2014 10:18 AM
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டி.என்.இ. ஆர்.சி.) புதிய தலைவராக எஸ். அக் ஷயகுமார் (58) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். இந்த ஆணையத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லாத ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆணையத்தின் புதிய தலைவராக எஸ்.அக் ஷயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை கடந்த பிப்ரவரியில் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று மாதத்துக்குள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று உத்தர விட்டது. இந்நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கமிட்டி கூட்டம், கடந்த வார தொடக்கத்தில் நடந்தது. இதில் தலைவராக அக் ஷயகுமார் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
வழக்கமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரியே நியமிக்கப்படுவார். முதன்முறையாக மின்துறையைச் சேர்ந்தவர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரான அக் ஷயகுமார், கடந்த மாதம் வரை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். இவருக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த ஏ.பால்ராஜ், எஸ்.கபிலன் ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்.
தற்போது ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.நாகல்சாமி, ஜி.ராஜகோபால் ஆகியோரும் மின்சார வாரியத்தில் பணியாற்றியவர்கள் தான்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1978-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற அக் ஷயகுமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1979-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
மேட்டூர் மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலைய திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளில் பணியாற்றியுள்ளார். 2008-ம் ஆண்டு தலைமைப் பொறியாளராக (பகிர்மானம்) நியமிக்கப்பட்ட இவர், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மாற்றியமைக்கப்பட்டபோது, மின் பகிர்மானக் கழகத்தின் இயக்குநரானார்.
கடந்த சில மாதங்கள் மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT