பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் ஐ.ஜி. மீது சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: தமிழக அரசு தகவல்

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் ஐ.ஜி. மீது சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

சென்னை: பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐ.ஜி. மீது சிபிசிஜடி விசாரணை தொடங்கிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை பணியாற்றிய ஐ.ஜி. முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்.பி கடந்த 2018-ஆம் ஆண்டில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்.பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை 6 மாதங்களில் தாக்கல் செய்யவும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வெளியானது.

இதையடுத்து, 2019-ஆம் ஆண்டில் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும், கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நிலையில் உள்ளதாகவும், தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை தொடங்கி விட்டதாகவும், எனவே கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு மட்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in